சீர்மை பதிப்பகம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதெனப் பதிப்பாளர் உவைஸ் தெரிவித்தார். தொடக்கத்திலிருந்து உடன் பயணித்து வருபவன் என்ற முறையில் மகிழ்ச்சியாய் இருந்தது. பதிப்பகத்திற்கு எத்தனையோ கனவுத் திட்டங்கள் இருப்பதும் அறிவேன். இந்த ஆண்டு அவற்றுள் முதன்மையான ஒன்று நிறைவேற இருக்கிறது. நண்பர்கள் பலரும் இணைந்து, உறுதுணையாய் நின்று இழுக்கும் தேர் எனச் சீர்மையைக் குறிப்பிடலாம். குறிப்பாக, நம்பகமான இளையோர் எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருவது சீர்மையின் தனித்துவங்களில் ஒன்று. வரும் நாள்களில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று, விரிந்த தளத்தில் சீர்மை பயணிக்கும்.
பதிப்பு நேர்மையும், ஒரு பிரதியைப் பல்முனையிலிருந்து அணுகி வெளியீடு குறித்த முடிவெடுக்கக்கூடிய திறனும் வாய்த்த பதிப்பாளரை மனதார வாழ்த்துகிறேன்.
‘சீர்மை’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த ஐந்து வருடங்களுக்குள் பதிப்புத் துறையில் அது பெரும் பாய்ச்சலொன்றை நிகழ்த்தியிருக்கிறது.
175 தலைப்புகளில் பல்வேறு துறைகளில் நூல்களைப் பதிப்பித்திருக்கிறது. இதுவரை தமிழில் தொடப்படாத பக்கங்களை அது தொட்டிருக்கிறது.
மொழிபெயபர்ப்பே அதன் ஆதார சுருதி. பெருமளவு அறபிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும், குறிப்பிடத்தக்களவு இந்திய மொழிகளிலிருந்தும் அது மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது.
‘சீர்மை’யின் உருவாக்கம் முதலே நான் அதனுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். இன்னும் சரியாகச் சொன்னால், சகோதரர் உவைஸ் அஹ்மதுடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பைப் பேணிவருகிறேன்.
அவரது அயராத உழைப்பும் திட்டமிடலும் மதிநுட்பமும் இந்த வளர்ச்சியின் முதுகெலும்பாக இருந்திருக்கின்றன.
அவருடன் கைகோர்த்து உழைத்து வரும் நண்பர்களான சம்மிலும், ஷரீஅத்தியும், பஷீரும், நதீமும், ரியாஸும் இன்னும் பலரும் சீர்மையின் வளர்ச்சிக்குப் பெருமளவு பங்காற்றியிருக்கிறார்கள்.
அனைவரும் வாழ்த்துக்குரியவர்கள்.
‘சீர்மை’க்கென்று மிக ஆரம்பத்திலிருந்து மொழிபெயர்த்து வருபவர்களில் நானும் ஒருவன். (https://www.facebook.com/share/p/17uhffPbyK/)
சமயம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் அறபு-ஆங்கில மொழிகளிலிருந்து நான் தமிழாக்கம் செய்த பல நூல்களை ‘சீர்மை’ முதல் பதிப்பாகவும் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிட்டிருக்கிறது; இன்னும் வெளியிடவும் உள்ளது.
‘சீர்மை’ ஆரம்பிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமியச் சிந்தனை சார்ந்த ஏராளமான நூல்களை மொழிபெயர்த்திருந்தாலும், ஆழமான இஸ்லாமிய வாசிப்புத் தளத்தில் மட்டுமே நான் அறியப்பட்டிருந்தேன்.
‘சீர்மை’க்கென்று நாவல்களையும் இலக்கிய நூல்களையும் மொழிபெயர்க்கத் தொடங்கிய பிறகே சற்றும் எதிர்பாராத தூரங்களிலிருந்தெல்லாம் என் மேல் வெளிச்சம் விழத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ்நிலைப்பட்ட பல வாசகர்களுக்கு நான் அறிமுகமானேன். அதில் இறைவன் ஏதோவொரு நன்மையை நாடியிருப்பான் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு.
‘சீர்மை’ இன்னும் வளரப் பிரார்த்திக்கிறேன். விரல்களில் எழுத முடியாதளவு நடுக்கம் தோன்றும் வரை அதற்கு ஒத்துழைப்பேன். குறிப்பாக, மொழிபெயர்ப்பில் இன்னும் சில புதிய சோதனை முயற்சிகளில் இறங்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் சீர்மை அரங்கைப் பார்வையிட்டேன். அவர்களோடு அலைபேசியில் ஏற்கனவே உரையாடியுள்ளதால் அதைப் புதிய சந்திப்பாக உணரவில்லை. அவர்கள் அறபு, பாரசீக மொழிகளில் வெளியான நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுகிறார்கள். அத்துடன் அவர்கள் வெளியிடும் ஸூஃபி நாவல்களும் இலக்கிய வாசகர்களைப் பெரிதும் கவரும். ‘ஜின்களின் ஆசான்’ நாவல் எனக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நாவலின் ஒரு காட்சி என் கனவிலும் வந்தது. முஹம்மது அல்கஸ்ஸாலி எழுதி ஷாஹுல் ஹமீது உமரீ மொழியாக்கம் செய்த ‘கருப்பொருளின் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை’ இரு தொகுதிகளையும் கடந்த றமளானில் படித்தேன். கல்வியியல் தரத்துடன் அமைந்த பாடநூல்களென இத்தொகுதிகளைச் சொல்லலாம். ஐந்தாண்டுகளை நிறைவுசெய்துள்ள சீர்மை பதிப்பகத்துக்கும், பதிப்பாளர் சகோதரர் உவைஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் பணி தொடரவும், மேன்மேலும் வளரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இறுதி வேதத்தின் முதல் கட்டளையாக ‘இக்றஃ’ என்ற மகத்தான தெய்வீகக் கட்டளையைச் சுமந்து ஹிறா குகையிலே நபிகளாரைச் சந்தித்தார் வானவர் ஜிப்ரீல். அறவொழுக்கத்துடன் அறிவொழுக்கத்தையும் பேணிப் பாதுகாக்கின்ற பண்பாட்டை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டல்கள் அந்த முதல் ஐந்து வசனங்களிலும் பட்டவர்த்தனமாகப் பட்டுத் தெறிக்கின்றன.
தனக்கு வாசிக்கத் தெரியாது/முடியாது என்று அழுத்தமாகக் கூறியும் அன்னாரை அரவணைத்து, ஆரத் தழுவி, வாசிக்கக் கற்றுக் கொடுத்தார் வானவர்.
இந்த முதல் நிகழ்வு எதிர்பார்க்கும் அறிவுசார் பணியானது, உலக முடியும்வரை தொடர வேண்டும் என்ற செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மட்டுமல்ல நிகழ்காலத்திலும் முன்கொண்டுசெல்லப்பட்டு எதிர்காலம் வரையும் தொடர வேண்டும்.
இந்தப் பின்புலத்தில்தான் வாசிப்பதற்கு என்னென்ன அடித்தளங்கள், பின்புலங்கள் அமைய வேண்டுமோ அவை அனைத்தையும் கனகச்சிதமாக, நிரப்பமாக அமைத்து ஐந்தாண்டு காலமாகப் பயணிக்கிறது சீர்மை. சீர்மையின் அனைத்துப் பணிகளிலும் சீர்மை இருக்கின்றது; சிறப்பும் இருக்கின்றது. சிந்திக்க, சீர்தூக்கிப் பார்க்க பலவும் இருக்கின்றன.
அதன் புத்தக உருவாக்கம், மொழிபெயர்ப்பு, பதிப்பு, வெளியீடு போன்றவை வியாபார நோக்கத்திலும் பொருளியல் நோக்கத்திலும் மாத்திரம் அமையாமல், சமூகத்தின் எழுச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஊன்றுகோலாய் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சீர்மையின் ஒவ்வொரு நூலின் முகப்புப் படங்களும், வடிவமைப்பும், புத்தகத் தலைப்புகளும் இதற்கு அழியாச் சான்றுகள்.
தமிழ்நாட்டில் தொடங்கிய அதே காலப்பகுதியில், சீர்மை இலங்கை வாசகர்கள் மத்தியிலும் தமிழ் பேசும் வாசகர்கள் மத்தியிலும் காட்டுத் தீ போல் வேகமாகப் பரவியது.
புத்தகத்தின் தலைப்பையும் உள்ளடக்கத்தையும் பார்க்கும் நிலையிலிருந்து வாசகர்களை விடுவித்து, பதிப்பகத்தைப் பார்க்கும் வழமையை அது மரபாக்கிவிட்டிருக்கிறது.
Don't judge the book by its cover என்பதற்கு மறுதலையாகத்தான் சீர்மை இயங்குகிறது. ஆள் பாதி - ஆடை பாதி என்பதுபோல சீர்மை நூல்களில் முன்னட்டை பாதி, உள்ளடக்கம் பாதி என்று அமைந்திருப்பது சிறப்பெனலாம்.
வாசிப்புக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு பல்வேறு கட்டங்கள் உள்ளன. வாசிப்பு எழுமாறாகவோ தற்செயலாகவோ சடுதியாகவோ தோன்றாது. ஒரே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஆயுள் முழுக்க வாசிக்க முடியாது. விதவிதமான நூல்கள் ரசனைக்கேற்பவும்; வயது, தேவை, காலம், அவசியம், துறை ஆகியவற்றைச் சார்ந்து பலவிதமான நூல்களும் கொண்டு வரப்பட வேண்டும்.
வாசிப்பதற்குப் புத்தகங்கள் தேவை. எழுத்தாளர்கள் புத்தகங்களை உருவாக்க வேண்டும்; தரமான நூல்களை மொழிபெயர்க்க வேண்டும்; பதிப்பிக்க வேண்டும்; அச்சிட வேண்டும்; விநியோகிக்க வேண்டும்; வெளியிட வேண்டும்; பரவலாக்கம் செய்ய வேண்டும்; சந்தைப்படுத்த வேண்டும்; விளம்பரப்படுத்த வேண்டும்; வருடாந்த புத்தகக் கண்காட்சிகள் வேண்டும்; நூல் பற்றிய கலந்துரையாடல்கள், விமர்சனங்கள், கருத்துரைகள், மதிப்புரைகள், அறிமுகங்கள் போன்றவையும் இடம்பெற வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தாற்போல் கடந்த ஐந்து வருடங்களாக சீர்மை முன்னெடுக்கின்ற பணி வாசகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
சீர்மையின் இந்தச் சாதனைகளின் பின்னால் வெளிப்படையாகச் சில காரணங்கள் இருக்க வேண்டும். சீர்மையைத் தன் உயிர்மூச்சாய்க் கொண்டுசெல்லும் உவைஸ் அவர்களின் இயல்பான துடிப்பு, துடினம், வேட்கை, வேகம், விவேகம், நூலார்வம், கலை ரசனை போன்றவை அவதானிக்கத் தக்க விடயங்கள்.
நூல் உள்ளடக்கத்தில் தரம் இருப்பது போலவே, கண்களைக் கவரத்தக்க வகையில் முன்னட்டை வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு, எழுத்துரு போன்றவையும் வாசகர்களை ஈர்த்துவிடும். அதிலும் சீர்மை கனகாத்திரமான முன்னெடுப்புகளைச் செய்துவருவதை அவதானிக்கலாம்.
அடுத்து சுய நூலாக்கம், மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்காக சீர்மை தேர்வுசெய்யும் நூல், நூலாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், நூல் வகைமைகள் போன்றவையும் மெச்சத்தக்கன. குறிப்பாக, மொழிபெயர்ப்புத் துறை ஜாம்பவானாகக் கருதப்படக்கூடிய கலாநிதி பீ.எம்.எம். இர்ஃபான், ஷாஹ் உமரீ, ரமீஸ் பிலாலி போன்றவர்களின் அர்ப்பணிப்பும் சீர்மையின் அறப்பணிக்கு அழியாத சான்றுகள்; நிலையான சாட்சிகள்.
இதில் இன்னொரு வகையில் தமிழுக்குப் பங்களிக்கும் வரலாற்றுச் சிறப்பும் நிகழ்கிறது. இலக்கியப் பாலமாக இரு வெவ்வேறு நாடுகளின் எழுத்தாளர்களைத் தமிழுக்கு கொண்டுவருவதோடு, அவர்களுடைய நூல்களை வாசகர்களுக்கு வழங்கும் பணியும் செவ்வனே இடம்பெறுகிறது.
காலம் கடுகதி வேகத்தில் மாற்றமுற்றாலும்கூட, பாரம்பரிய முறையில் புத்தக்க கலாச்சாரத்தை நிலைநாட்டும் ஒரு நடவடிக்கையாகவும் இது இருக்கிறது.
ஆன்லைன் டிஜிட்டல் வாசிப்பு எவ்வளவு வீரியத்தோடு மேம்பட்டாலும், ஒரு புத்தகத்தின் வன்பிரதியைக் கையில் எடுத்து, தொட்டு, ரசித்துப் பரவசமாய் உணர்ந்து வாசிக்கும் அனுபவத்துக்கு வேறு எதுவும் ஈடாகாது, இணையாகாது. இந்தப் பணி தொடர்வதற்கும் சீர்மை சிறப்பாய்க் களமமைக்கிறது.
இலக்கியம், அரசியல், இஸ்லாம், கோட்பாடு, ஸூஃபித்துவம், வரலாறு, அறிவியல், மெய்யியல், சினிமா, வாழ்வியல் எனப் பல்வேறு வகைமைகளில் 175 தலைப்புகளையும் தாண்டி நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
ஒவ்வொரு நூலின் தரத்திலும் தேர்விலும் அதீத கவனம் எடுத்து அர்ப்பணிப்புடன் பிரசுரிக்கப் பல்வேறு நுட்பங்களையும் உத்திகளையும் கடைப்பிடித்துவருவதால் சீர்மைக்கு —குறிப்பாக இலங்கையிலும் — பல வாசகர்கள், விநியோகஸ்தர்கள் உருவாகியிருக்கின்றனர்.
வாசிப்பே முதல் வணக்கம் என்பதை வாயால் மாத்திரம் உரைகளாகக் கொட்டித் தீர்ப்பதைவிட, வாசிப்பதற்கான சிறந்த களமமைத்துக் கொடுத்திருக்கும் சீர்மையும் அதன் வாசிப்பு ரசனையும் கலையுணர்வுசார்ந்த வகையில் அமைந்திருப்பது பாராட்டத் தக்கது.
சீர்மை ஐந்தாண்டுக் காலத்தில் இத்தனை புத்தகங்களைக் கையளிப்பதென்பது புத்தகக் கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் பங்களிக்கும் மகத்தான வரலாற்றுப் பணி என்றுதான் சொல்ல வேண்டும்.
வாழ்க சீர்மை! அகல விரியட்டும் அதன் பரவலாக்கம்!
சீர்மை குறுகிய காலத்திலேயே பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
நூல்கள் கவனம் பெறுவது ஒரு வகை — அது ஆசிரியரைப் பொறுத்தது. ஆனால், ஒரு பதிப்பகம் கவனம் பெறுவதென்பது, அதன் கூட்டு உழைப்பைப் பொறுத்தது. அந்த வகையில், இளைஞர்கள் ஒன்றுகூடிச் சுதந்திரமாக உழைப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் தைரியத்தையும் தருகிறது.
உண்மையாக நூல்கள், அட்டை வடிவமைப்பு, ஸ்டால், எல்லாமே Classஆக உள்ளது.